கடந்த சில வாரங்களாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் உரிய ஆவணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மக்கள் அடங்குவர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது புக்கிட் ஜலில் மற்றும் செமெனியி தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவ்வாறு அவர்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போதிய வசதிகள் இல்லாமல் ஒரே அறையில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அந்த இடங்களில் நோய் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு புக்கிட் ஜலில் மையத்தில் உள்ள 155 பேருக்கு நோய் தொற்று உறுதியானதை அடுத்து அங்கு பதட்டம் சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி புக்கிட் ஜலில் மையத்தில் இருந்த இந்திய பிரஜை ஒருவர் கோவிட் 19 தொற்றால் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 67 வயது மதிக்கத்தக்க அவர் ஏற்கனவே ரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வந்தார் என்றும் கூறப்படுகின்றது.