கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மலேசிய அதிகாரிகள் ரோஹிங்கியா அகதிகள் உட்பட நூற்றுக்கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை தனிப்படுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் கோலாலம்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 586 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசிய போலீசால் தடுத்து வைக்கப்பட்டவர்களில் மியான்மரைச் சேர்ந்த சிறு குழந்தைகள் மற்றும் ரோஹிங்கியா இன மக்களும் அடங்குவர். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள இயக்கத் தடைகளுக்கு மத்தியில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் பிற பகுதிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் என்று அரசு செய்தி நிறுவனம் பெர்னாமா தெரிவித்துள்ளது.
ஆனால் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு புலம்பெயர்ந்தோரைத் தடுத்து வைப்பதைத் தவிர்க்கவும், எல்லா குழந்தைகளையும் விடுவிக்கவும் மேலும் நெரிசலான தடுப்பு மையங்களில் வைரஸின் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.