மலேசியாவில் மே மாத தொடக்கத்தில், நிலவி வந்த இயக்கக் கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் அறிவித்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள 80-க்கும் அதிகமான தொற்று முற்றிலும் இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள இந்து கோயில்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் நேற்று வெளியானது. இந்நிலையில் இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதம் சார்ந்த வழிபட்டு தளங்கள் வரும் ஜூன் 10ம் தேதி முதல் திறக்கப்படும் (பச்சை மண்டலங்களில் மட்டும்) என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
இந்த தளர்வு அறிவிக்கப்பட்டாலும், குறிப்பட்ட அளவை விட மக்கள் அதிகமாக கூடக்கூடாது, திருமணம் போன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்று பல அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த விதிமுறைகளை மீறி சிலாங்கூரில் உள்ள ‘Serdang’ என்ற இடத்தில் உள்ள இந்து கோவிலில் சுமார் 100 பேர் கலந்து கொண்டு நடந்த திருமண நிகழ்வு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற வருகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் இஸ்மாயில் சபரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழிபாடு தளங்களில் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட வயது வரம்பு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் திருமண நிகழ்வுகள் நடைபெற கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.