COVID – 19 : மலேசியாவில் 4500-ஐ தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

noor hisham abdullah

பார் முழுதும் பரவி வரும் கொரோனா காரணமாக உலகின் வல்லரசு நாடான அமேரிக்காவில் இதுவரை 20,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். சுமார் 4.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோய் தொற்று தொடங்கிய நாள் முதல் WHO எனப்படும் உலக சுகாதார மையம் மற்றும் worldometers.info என்ற இணையதளம் ஒன்றும் உலக அளவில் கொரோனா குறித்த அறிக்கை வெளியிட்டு வருகின்றது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரை இந்த நோயின் காரணமாக உலக அளவில் சுமார் 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த நோய் தாக்கி இதுவரை உலக அளவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுமார் 4,09,540 பேர் இந்த கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா. ‘மலேசியா இன்று’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மலேசியாவில் 153 பேர் புதிதாக இந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாதிப்பு எண்ணிக்கையை 4683ஆக உயர்த்தி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மலேசியாவில் மூவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்னிக்கை 76ஆக உயர்ந்துள்ளது.

அதே போல இன்று 113 பேர் குணமடைந்து, அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். இதனால் குணமடைந்தவர்கள் சதவிகிதம் 45ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.