கொரோனா – மலேசியாவில் மேலும் இருவருக்கு நீங்கியது தொற்று

corona cure

கொரோனா நோய் தொற்று காரணமாக இதுவரை மலேசியாவில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ‘குஅங்டோங்’ நகரை சேர்ந்த 4 வயது சிறுமி முற்றிலும் குணமடைந்து நாடு திரும்பினார். இந்நிலையில் சேனல் நியூ ஆசியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மேலும் இருவர் இந்த கொரோனா நோய் தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஜோஹோர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் கடந்த பிப்ரவரி 8ம் தேதி இந்த கொரோனா தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்ததாகவும், அதே போல கோலாலம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் ஒருவர் கடந்த பிப்ரவரி 9ம் தேதி கொரோனா தொற்று நீங்கி முழுமையாக நலம் பெற்றுள்ளதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த இருவரும் இன்னும் அவர்கள் தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த நோய் தொற்று காரணமாக மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் பலர் சிறந்த முறையில் தேறி வருவதாகவும். வருங்காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடைவார்கள் என்றும் நம்புவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.