மிக நீண்ட அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவி ஏற்றார் 72 வயதான முகிதீன். இந்நிலையில் மிக கடுமையான அரசியல் நிலவரத்திற்கு மத்தியில் நேற்று மாலை அமைச்சரவை பட்டியலை அறிவித்தார் மலேசியாவின் புதிய பிரதமர் முகிதீன். இந்த அமைச்சரவை பட்டியல் குறித்து மக்களின் கருத்து என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
பிரதமர் முகிதீன் யாசின் தன்னுடைய அமைச்சரவையை சார்ந்த அமைச்சர்களின் பட்டியலை நேற்று மாலை புத்ராஜெயாவில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் “பொருளாதாரம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி மற்றும் சமூக பிரச்சனைகளை உள்ளடிக்கிய அமைச்சரவை தொடர்பான விஷயங்களை ஒன்றிணைக்க உதவும் வகையில் நான்கு மூத்த அமைச்சர்களை நான் நியமித்துள்ளேன் என்று கூறினார்.
இந்த அமைச்சர்களை கொண்டு மலேசியா மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவேன் என்று கூறினார். கடந்த சில நாட்களாக அமைச்சரவையில் மட்டும் இன்றி மலேசியா அரசியலிலும் ஒரு அசாதாரண சூழல் நிலவுவது எல்லோரும் அறிந்ததே. அரசியல் சூழல் ஒருபுறம் இருக்க தொடர்ந்து மலேசியாவில் பரவி வரும் கொரோனாவால் மக்கள் விழிப்புடன் செயல்பட மலேசியா அரசு அறிவுறுத்தி உள்ளது.