தற்போது கொரோனா பாதிக்காத நாடு இந்த உலகத்தில் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு உலகம் முழுவதும் இந்த நோய் பரவிக் கிடக்கிறது. சீனாவில் தொடங்கி தற்போது ஐரோப்பிய நாடுகளை வதைத்து வருகின்றது இந்த கொரோனா. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் நிலையை கண்டு பலரும் மனம் நொந்துள்ளனர். தங்களால் இயன்ற பிராத்தனைகளை அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு வழங்குவதாக பல நாட்டு மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மலேசியாவும் தற்போது இந்த நோயின் பிடியில் சிக்கியுள்ளது, இதுவரை 3000-க்கும் அதிகமானோர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிற நாடுகளில் இருந்து தாயகமான மலேசியாவிற்கு திரும்புவோர் நிச்சயம் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட வேண்டும் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள் மலேசியா திரும்பும்போது இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்று மலேசியா அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் அங்கிருந்து மலேசியா வருபவர்கள் அந்நாட்டிடம் இருந்து கொரோனா இல்லை என்ற சான்றை பெற்று வரவேண்டும் என்று தெளிவாக தெரிவித்துள்ளது. இதற்கு ஸ்வாப் சோதனை என்ற சோதனையை அவர்கள் செய்துகொண்டு அதை காண்பித்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இன்றி அவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.